‘நன்றி அப்பா..!!’குருபூர்ணிமா நாளில் கலைஞரை நினைவுகூர்ந்த குஷ்பூ
குருபூர்ணிமா தினமான இன்று கலைஞர் கருணாநிதியை , நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு நினைவுகூர்ந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பெளர்ணமி நாளில் குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது. அதன்படி 2022, ஜூலை 13ம் தேதி அதாவது இன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படும். தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவை போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்து வழிபடுவர். இதனையொட்டி பிரதமர் மோடி உள்பட பலரும் குரு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. அத்துடன் இன்றைய தினம் பலரும் தங்களது குருக்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அவர்கள் வரிசையில் நடிகையும் , பாஜக நிர்வாகியுமான குஷ்பு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்து வந்த இவர் முதன்முதலில் திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் காங்கிரஸில் சேர்ந்த அவர் அப்போது ஆளும் கட்சியான பாஜக கடுமையாக தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரங்கள் செய்திருக்கிறார். இந்நிலையில் கடைசியாக தற்போது பாஜகவில் தஞ்சமடைந்துள்ள குஷ்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அரசியலில் கவனம் செலுத்தும் அதே வேளையில், தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று குரு பூர்ணிமா இதனை ஒட்டி கலைஞர் கருணாநிதி அவர் நினைவு கூர்ந்து இருக்கிறார் . இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, குருபூர்ணிமா தினமான இன்று, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து சமத்துவம், மனிதம் மற்றும் சுயமரியாதையை விட சிறந்தது எதுவுமில்லை என்று கற்றுத்தந்த கலைஞருக்கு நன்றி சொல்ல வேண்டும் . என்றும் அவர் நினைவுகூரப்படுவார்,என் பார்வையில் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருப்பார்.. நன்றி அப்பா..!!” என்று குறிப்பிட்டுள்ளார்.