×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 8ம் தேதி தமிழகத்தை நெருங்கும் - வானிலை ஆய்வு மையம்

 

வங்க கடலில் டிசம்பர் 5ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 8ம் தேதி தமிழகத்தை நோக்கி நகரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.