இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை - ராமதாஸ்
இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
சென்னை ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் , ஆதீனங்கள், கிறிஸ்துவ பிசப்புகள் , முஸ்லிம் மத குருமார்கள், விவசாயிகள் என்று 1800க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தன.
ஆனால், இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அன்பழகன், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், ஓ. எஸ். மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் விழாவில் பங்கேற்றனர். பாஜகவின் சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
திமுக சார்பில் முதல்வரோ, அமைச்சர்களோ, எம்பி மற்றும் எம்எல்ஏக்களோ யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. திமுக கூட்டணி கட்சியினரும் இதில் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு விவகாரத்தினால் திமுகவும் கூட்டணி கட்சியினரும் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த அழைப்பிதழை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,
’’இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை...
ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில்
திருவள்ளுவர் ஆண்டு இல்லை...
தமிழ் மாதம் இல்லை...
தமிழ்நாடு இல்லை....
தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை.
இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை!’’என்கிறார்.
அதற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருந்தபோதே, தமிழக ஆளுநர் என்று அச்சிடப்பட்ட அழைப்பிதழை பகிருந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.