×

நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு கூடுதல் அதிகாரம்  -  தமிழக அரசு அரசாணை..

 

நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு  கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை மாநகராட்சியை தவிர்த்து நகராட்சி, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பொது செலவினங்கள், மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படும் நிதிகளை பயன்படுத்துவதற்கான அதிகாரங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது.  அதன்படி 35 லட்ச ரூபாய் வரையிலான பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் இதுவரை ரூ. 5 கோடி வரையிலாக பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது  10 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு இயக்குனரே அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், 10 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தும் போது அரசின் அனுமதி பெற வேண்டும் .  அதே போல ரூ. 10 லட்சம்  வரையிலான திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் , இதுவரை  மாநகராட்சி மேயர்களுக்கு  20 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்க அதிகாரம் இருந்த நிலையில்,  இனி 50 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு இயக்குனரே அனுமதி வழங்கலாம் எனவும்,  அதற்கு அதிகமான தொகை கொண்ட திட்டங்களுக்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது