×

சர்ச்சை நாயகன் ஆளுநர் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்- டிடிவி தினகரன்

 

தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்வதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளோடு கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செவிலியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக உருவெடுத்து இருக்கிறார். அவருடைய பேச்சு ஆளுநர் பதவிக்கு அழகு அல்ல. அவருடைய பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

பொதுவெளியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியது தவறு என அவரே உணரும் காலம் விரைவில் வரும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை கைது செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்” எனக் கூறினார்.