×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு

 

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.  இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் அதிகமாக வாங்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  உதயநிதி ஸ்டாலின் வெற்றியையடுத்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்எல் ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.  உதயநிதி தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்றும் அந்த வேட்பு மனுவை ஏற்றது தவறு என்றும் எம்எல் ரவி தனது மனுவில் கூறியிருந்தார்.

 இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,  தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமென்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்தபோது , செலுத்த வேண்டிய வைப்புத் தொகையை செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் வாதிக்கப்பட்டது . நீதிபதி வழக்கின் தீர்ப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி கூறிய நிலையில் வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்ததுடன்,  தேர்தலை எதிர்த்து இருவரும் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்குகளை தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என்று  உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளார்.