×

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல்வீசி தாக்குதல்

 

திருப்பூரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ராக்கியாபாளையம் அடுத்த ஜெய் நகர் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேகப்பிரிவு ஆசிரியராக பொறுப்பு வகித்து வரக்கூடிய பிரபு என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டிற்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரபு வீடு என்பதை அருகில் இருந்தவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தங்கள் கொண்டு வந்த பையில் இருந்த கற்களை எடுத்து அவரது வீட்டில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்கம் வீசியுள்ளனர். இதில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்க சேதம் அடைந்துள்ளது. 

சத்தம் கேட்டு பிரபு வெளியே வந்து பார்த்தபோது ஏற்கனவே வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் ஏறி நால்வரும் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர் எஸ் எஸ் பிரமுகர் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரவியதை அடுத்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் ஜெய் நகரில் கூடியதால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.