×

ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்திவைப்பு

 

ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை இயற்கை நீதி கொள்கைக்கு எதிரானது என தெரிவித்து சஸ்பெண்ட் உத்தரவை தினேஷ் குண்டு ராவ் நிறுத்தி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்


கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் கலந்து கொள்ள 15 நாள் அவகாசம் கேட்டு ரூபி மனோகரன் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கடிதம் எழுதி இருந்தார். 

இந்நிலையில் இன்று மற்றொரு தரப்பான ரஞ்சன் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளும் வரை, ரூபி மனோகரன்  தற்காலிகமாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். 

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்துள்ள சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், இது இயற்கை நீதிக்கு எதிராக நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், ஒழுங்கு நடவடிக்கை குழு செயல்பாடுகளையும் நிறுத்தி வைப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.