×


கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

 

கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார்.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடி 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும் இந்த கலவரத்தில் போலீசாரும் காயமடைந்தனர். இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் ஒன்று கூடி கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து வன்முறையை தூண்டும் செயல்பட்டதாக 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை  கையாள 18 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அந்த குழுவில் 6 டி.எஸ்.பிக்கள், 9 ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். நாளை சிறப்பு குழுவில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகள் சேலம் சரக டி.ஐஜி முன்பு காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் குழுவில் இடம்பெற்றுள்ள டி.எஸ்.பிக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மைக் பொருத்தப்பட்ட அலுவலக வாகனத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும், வாகனத்திற்கு தேவையான எரிபொருளை முன்கூட்டியே கொடுக்கப்பட வேண்டும் என உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தவிர மாற்று அதிகாரிகளை அனுப்பக்கூடாது என தெரிவித்துள்ளார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட 18பேரும் அடுத்த இரண்டு வார காலத்திற்கு சிறப்பு புலனாய்வு குழுவில் பணிபுரிவதற்கான தயார் நிலையில் வர வேண்டும் எனவும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என டிஜிபி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.