×

ரூ. 2 கோடி சொத்துக்காக சொந்த தந்தையை கொலை செய்த மகன்!

 

ரூ. 2 கோடி சொத்துக்காக சொந்த தந்தையை கொலை செய்த மகன்!ஈரோடு அருகே வேப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 68 வயதான விவசாயி பழனிச்சாமி. இவரது மனைவி ருக்மணி(65). இவர்களுக்கு  திருமணமான பிரியதர்ஷினி என்ற மகளும், திருமணமாகாத ரவிக்குமார் என்ற 37 வயது மகனும் உள்ளனர்.

பழனிச்சாமிக்கு சொந்தமாக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்து பணத்தை தனக்கு தருமாறு மகன் ரவிக்குமார் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்..  இது போன்ற வாக்குவாதம் நேற்றிரவு நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் பழனிச்சாமியை ரவிக்குமார் கட்டையால் அடித்துள்ளார். 

இதில் காயமடைந்த பழனிச்சாமி சிகிச்சைக்கு செல்லாமல் வழக்கம் போல் வீட்டின் முன் கட்டிலில் படுத்து தூங்க சென்றுள்ளார். பின்னர் காலையில் அவரது மனைவி ருக்மணி சென்று பார்த்த போது பழனிச்சாமி சடலமாக கிடந்தார்.  இது குறித்து போலீசாருக்கு புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலாகா போலீசார் சடலத்தை மீட்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். தந்தையை அடித்ததாக ரவிக்குமார் கூறியதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். 

B.E பட்டதாரியான 37 வயது ரவிக்குமார் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மது போதையில் அடிக்கடி இது போன்று தகராறில் ஈடுபடுவதும், தந்தையை தாக்குவதும் வழக்கமாக நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. அதைப்போலவே நேற்றிரவு நடந்த தாக்குதலில் பழனிச்சாமி உயிரிழந்தார்.