×

பாலியல் வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபாவிடம் 2 மணிநேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

 

பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபா சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். 

சென்னை அடுத்த கேளம்பாக்கதில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆணடு ஜூன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர் மீது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக 7 போக்சோ வழக்குகளும், பள்ளியில் படித்த மாணவியின் தாயாரை மிரட்டியதாக ஒரு வழக்கு என மொத்தம் எட்டு வழக்குகளில் சிவசங்கர் பாபவை கைது செய்து அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.

சிவசங்கர் பாபா தரப்பில் உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் மீது உள்ள அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெறப்பட்டது. தமிழ்நாட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லக்கூடாது பாஸ்போர்ட்டை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், தேவைப்பட்டால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தனர்

அதனடிப்படையில் சிவசங்கர் பாபா எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர் இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் அவர் சென்றுவிட்டார். மீண்டும் வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் சிவசங்கர் பாபாவை அழைக்கப்படுவார் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.