×

 பள்ளிகளில்  துப்புரவு பணி செய்யும்  மாணவிகள்..  அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டதா?? - மநீம கண்டனம்..

 


நெல்லை, நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவிகளே துப்புரவுப் பணியில் ஈடுபட்டதற்கு,  அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா? என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மேலும், பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வகம், கழிப்பறை வசதி இல்லை, சுற்றிலும் செடி, புதர்கள் சூழ்ந்திருப்பதால் வகுப்புக்குள் பாம்புகள் நுழைகின்றன என்றெல்லாம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிக்கின்றனர். கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்வர் பெருமைபட்டுக் கொள்கிறார். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலைமைக்கு நாங்குநேரி பள்ளி சிறு உதாரணம்தான். எனவே, பணியாளர் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.