நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே வருகைப்பதிவு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு TNSED செயலியில் மட்டுமே செய்யவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு செயலியில் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவுக்கு TNSED செயலி நடைமுறை பின்பற்றப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. TNSED செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை பதிவேற்றவும், , அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியில் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளீடு செய்வதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.