×

ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது மின் கட்டண உயர்வை திசை திருப்பும் வேலை- சசிகலா

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக கன்னிகைப்பேர் பகுதியில் அதிமுக கொடிகளுடன் வந்த தொண்டர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “மின் கட்டண உயர்வை திசை திருப்பும் வேலை தான் ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது. ரேஷன் கடையில் முறையாக அரிசி வழங்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்க ஏழைகளை நிர்பந்திக்க கூடாது. ஓபிஎஸும், ஈபிஎஸும் தனித்தனியாக பிரதமரை சந்தித்தது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் கடல் வழியாக வருவதால் கட்டுப்படுத்த முடியவில்லை என திமுக அமைச்சர் கூறுகிறார். தமிழகத்தில் நுழையும் முன்பே அதனை தடுக்க வேண்டும். அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டு காவல் துறை அதனை தடுக்க வேண்டும், ஓபிஎஸ், ஈபிஎஸ் யார் பக்கம் என்பது குறித்து கழக தொண்டர்கள் எடுக்கும் முடிவு. அவர்கள் யாரை சொல்கிறார்களோ அதுவே இறுதியானது. மக்களே எஜமானர்கள், அது தான் நடக்கும். ஆளும் கட்சியினர் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.