×

இடைத்தேர்தல் - சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நாளை ஆலோசனை

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக,  மாவட்ட செயலாளர்களுடன் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார்.  இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்தது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்தார். அதிமுகவை பொறுத்தவரையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருதரப்பினர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதால் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனிடையே தேர்தலில் போட்டியிடவும் இல்லை யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியோ, எங்கள் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று சீமான் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தேர்தலில் கமல்ஹாசனின் மநீம கட்சியும், விஜயகாந்தின் தேமுதிக கட்சியும் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இது குறித்து இரு கட்சிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இதேபோல் பாஜகவின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. 

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் காணோலி காட்சி வாயிலாக நாளை நடைபெறுகிறது.  இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் தேர்தல் நடக்கக்கூடிய ஈரோட்டை சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சரத்குமார் கேட்டறிகிறார். குறிப்பாக தேர்தல் நடைபெறும் ஈரோடு மாவட்ட செயலாளர்கள் எந்த விஷயங்களை குறிப்பிடுகிறார்கள் என்பதை ஆலோசித்து, அதன் பின்னர் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.