×

உயிருடன் உள்ள பெண்ணின் போட்டோவை முகநூலில் பதிவிட்டு இறந்ததாக வதந்தி- இளைஞருக்கு வலைவீச்சு

 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய இளைஞரை புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே உள்ள இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ ஜோவின். இவரது மனைவி தன்ஷா. இவருக்கும் பெரியவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த உறவினர்களுக்கும் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தன்ஷா வின் உறவுக்கார இளைஞர் பெரியவிளை பகுதியை சேர்ந்த நாதன் ஜோசப் என்ற இளைஞர் கடந்த மாதம் 26-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தன்ஷாவின் புகைப்படத்துடன் அவர் இறந்து விட்டதாக பொருள்படும் விதமாக ஆர்.ஐ.பி (RIP)என்று ஆங்கிலத்தில் வாசகத்தை பதிவேற்றி நண்பர்களிடமும் அதை பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது முகநூல் பக்கங்களில் வேகமாக பகிரப்பட்ட நிலையில் தன்ஷாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவர்கள் விசாரிக்கையில் அது வதந்தி என தெரியவந்த நிலையில், தகவல் அறிந்த தன்ஷா அந்த இளைஞரிடம் தொடர்பு கொண்டு பதிவை நீக்க கேட்டுள்ளார். ஆனால் அவர் பதிவை நீக்க முடியாது என கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தன்ஷா ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் இளம்பெண் இறந்து விட்டதாக முகலூலில் வதந்தி செய்தியை பரப்பி தலைமறைவாக இருக்கும் இளைஞர் நாதன் ஜோசப்பை தேடி வருகின்றனர்.