பத்திரப் பதிவுத்துறையில் ரூ. 20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு - அமைச்சர் மூர்த்தி தகவல்..
பத்திரப்பதிவுத் துறையில் ரூ. 20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, சனிக்கிழமை தோறும் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்யும் திட்டமானது முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள 100 சார்பதிவு அலுவலகங்களில் இன்று முதல் தொடங்கப்படுவதாக தெரிவித்தார். விரைவில் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிய அவர், தமிழகத்தில் 87 சதவீதம் வருவாய் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மூலமாக கிடைப்பதாக கூறினார்.
மக்களிடம் குறைகளைக் கேட்டு, தனியார் ஊழியர்களுக்கு ஏதுவாக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை தோறும் பத்திரப்பதிவு செய்யும் முறை நடைமுறைபடுத்தி வருவதாகவும், கடந்த ஆண்டைவிட தற்போது போலி பத்திர பதிவு குறைந்திருப்பதாகவும் கூறிய அவர், பத்திரப் பதிவுத்துறையில் உள்ள குறைகளை களைய சட்ட முன்வடிவு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கையெழுத்து கிடைத்தவுடன் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அப்போது போலி பத்திரப்பதிவு என்பதே இருக்காது எனவும் அமைச்சர் மூர்த்தி குறிப்பிட்டார். இந்தத் திட்டம் இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டி திட்டமாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தவறு செய்தவர்கள் சிறை தண்டனை அனுபவிப்பார்கள் என்றும் கூறினார். மேலும் கடந்த ஓராண்டில் 4 மாதங்கள் கொரோனா, 2 மாத காலம் உள்ளாட்சித் தேர்தல், ஒரு மாத காலம் மழை வெள்ளம் என கடுமையான சூழ்நிலையிலும் பதிவுத்துறையில் ரூ. 13 ஆயிரத்து 260 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாகவும், நடப்பு ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே இலக்கு என்றும் தெரிவித்தார்.