×

தமிழகத்தில் ரூ.3,000 கோடிக்கு மேலான இந்து அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு

 

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ’வள்ளலார் -200’ எனும் பெயரில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 5 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  “ஆன்றோர் சான்றோர் அனைவருக்கும் விழா எடுத்து வருகிறோம். தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் முதல்வர் வரைபடத்தை பார்த்து ஒப்புதல் வழங்கிய பிறகு பணிகள் தொடங்கும். வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் -5 ம் தேதி 'தைக் கருணை ' நாளாக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார். 'வள்ளலார் -200 ' எனும் பெயரில் முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் அக்டோபர் 5 ம் தேதி நடைபெற உள்ளது. வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156ம் ஆண்டு , வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152ம் ஆண்டை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. வள்ளலார் பக்தர்கள் இதில்  பங்கேற்க உள்ளனர். அன்றைய தினத்தில் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. 

இந்து அறநிலையத்துறை சொத்துகள் யார் வசம் இருந்தாலும் அவை மீட்கப்படும், இந்த ஆட்சியில் இதுவரை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 3ஆயிரம் கோடிக்கு மேலான சொத்துகள்  மீட்கப்பட்டுள்ளது. ரேவர் கருவி மூலம் இந்து அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம். இதுவரை  80ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  அளவீடு  செய்துள்ளோம். இந்து அறநிலையத்துறை சொத்துகள் கண்டறியப்பட்டு அவற்றை பாதுகாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தாமன சொத்து பட்டியல் முழுமையாக வெளியிடப்படும். வக்ஃபு வாரியம்  தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து விசாரிக்குமாறு இந்து அறநிலையத்துறை ஆணையாளர் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்ற பிறகு இந்த விசயத்தில் முழு கருத்தையும் தெரிவிப்போம்” என்றார்.