×

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்காது..

 

பொங்கல் பண்டிகையையொட்டி  இன்று ( ஜனவரி 16ம் தேதி) ரேஷன் கடைகள்  இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது.  இதற்காக ஜனவரி 3ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில்,  1000 ரூபாய் ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக  வழக்கமாக விடுமுறை விடப்படும் நாளான கடந்த வெள்ளிக்கிழமை ( ஜனவரி 13) பணி நாளாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக இன்று ( 13ஆம் தேதி) பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி மாற்று விடுமுறை நாளாக  அறிவிக்கப்பட்டிருந்தது.


 
இந்நிலையில்  நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது,  ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்படுவதாக  உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.  முன்னதாக  ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள்  15, 16ம் ( ஞாயிறு மற்றும் திங்கள் )  தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார்.  அத்தகைய சூழலில் ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என்ற அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கவில்லை..