×

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு.. தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..

 

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறை வருகிற்  19-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அந்த அமைப்பு அனுமதி கோரியிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காததால் அந்த அமைப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில்  உள் அரங்குகளுக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள  அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில மீண்டும் மேல்முறையீட்டு மனுகளை தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அணிவகுப்பு ஊர்வலத்தை 29-ம் தேதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக ஆர்எஸ்எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி அளிக்க விண்ணப்பங்கள் தந்தது ஏற்புடையதல்ல என்று காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால், அனைத்து போராட்டங்களுக்கும் இதே அணுகுமுறையைதான் காவல்துறை பின்பற்றுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது காவல்துறை தரப்பில்,  இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள்,  தமிழ்நாடு அரசு மற்றும்  காவல்துறை வரும் 19ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு  விசாரணையை   20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.