×


வடநாட்டில் இருந்து பிழைப்புக்காக வந்த கும்பல் தமிழ்நாடு பெயரை மாற்ற நினைக்கிறது! ஆளுநரை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி

 

கலைஞர் மற்றும் பேராசிரியர் இல்லாத நேரத்தில் திமுகவை பார்த்து சவால் விடும் அளவிற்கு வடநாட்டில்இருந்து வந்தவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது, பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக  ஆளுநரை திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மறைந்த பொது செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுபொதுக்கூட்டம் கலைஞர் பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளை கடைத்தெருவில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் மற்றும் திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “கலைஞர் மற்றும் பேராசிரியர் இல்லாத நேரத்தில் திமுகவை பார்த்து சவால் விடும் அளவிற்கு வடநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது. பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிக்கின்றனர். வடநாட்டில் இருந்து பிழைப்புக்காக தமிழகம் வந்த கும்பல் திராவிடம் என்றால் என்ன? என்று தற்போது கேள்வி எழுப்புகிறது. பேராசிரியர் மற்றும் கலைஞர் ஆகியோர் இல்லை என்று நினைத்து சிலர் திமுகவிற்கு சவால்விடுகிறார்கள்.

பத்து பேராசிரியர் மற்றும் பத்து கலைஞருக்கு சமமாக செயல்படுகிறார் தற்போதைய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கும் வடநாட்டுக்காரரான தற்போதைய ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்று சொல்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை பெறுவதற்கு திமுக கடுமையாக உழைத்து இருக்கிறது” எனக் கூறினார்.