×

தமிழகத்தில் ஷூட்டிங் நடத்துங்கள்..! நடிகர் அஜித்துக்கு ஆர்.கே. செல்வமணி கோரிக்கை

 

நடிகர் அஜித் குமார் தனது திரைப்பட படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளதாக செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு நேரடியாக எந்த கடிதமும் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக நாளைய தினம் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8 ஆம் தேதி நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் எந்தவொரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாது. நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால் தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நடிகர் அஜித் குமார் தனது படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. நடிகர் அஜித்குமார்,இயக்குனர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்கள் கோரிக்கை இது தான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது .இதே கோரிக்கையை நடிகர் விஜயிடம் நாங்கள் முன்னர் வைத்த போது விஜய் எங்கள் கோரிக்கை ஏற்றார்” என தெரிவித்தார்.