×

கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான் - ஆர்.பி.உதயகுமார்

 

கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதை அடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது.  இரட்டை இல்லை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்திடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஒரு தலைமையை அடையாளம் காட்டும் நிகழ்வு இது. கடுமையான உழைப்பின் அடையாளம் யார்... கடமையான பண்பு கொண்டவர் யார், தடுமாறாத மனம் உறுதி கொண்டவர் யார்.. யார்.. யார்.. என்றால் அது எடப்பாடியார். அந்த ஒற்றை சொல்லிலே இத்தனைக்கு மொத்த உருவமாக இருந்து நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கார். உழைப்பால் உயர்ந்தவர். விடாமுயற்சியால் விண்ணை தொட்டவர்.இன்று ராமனாக அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு மகுடம் சூட்டும்போது லட்சுமணனை காணவில்லை என கலங்க வேண்டாம். இதோ ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணனாக நம்மிடத்திலே இருக்கிறார்கள். என்ன செய்வது கட்டபொம்மன் பிறந்த மண்ணிலே தான் எட்டப்பனும் பிறக்கிறான்” எனக் கூறினார்.