×

கோடை காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்ய கூடாது? -  நடைமுறைகள் வெளியீடு

 

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் கோடை காலத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. இதன்படி தமிழக அரசின் பொதுச் சுகாதாரத்துறையும் கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கோடை கால நோய்கள் தொடர்பான அவரச உதவிக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும், பயணத்தின் போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும், ஓஆர்எஸ், எலுமிச்சைச் சாறு, இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும் எனவும், காற்றோட்டம் உள்ள குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெளியே செல்லும்போது காலணி அணிய வேண்டும், மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் சுற்றக் கூடாது. வெறுங்காலுடன் நடக்க கூடாது.மதிய வேளையில் வீட்டின் மொட்டை மாடியில் விளையாட கூடாது. செயற்கை குளிர்பானங்கள், மது, புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். உடல் வெப்பம் மற்றும் மனக் குழப்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்கு 108 அவரச ஊர்தி சேவையை பயன்படுத்தவும். அவரச உதவிக்கு 104 என்ற எண்னை அழைக்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.