×

பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் நடைமுறை - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
 

 

சட்டப்பேரவையில் கடந்த மே 7-ஆம் தேதி மனிதவள மேலாண்மை துறை மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைமீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். 

அப்போது பேசிய அவர்,  தற்போது அரசு பணியில் நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமாகும் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்பது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  இந்த நடைமுறையில் உள்ள செயல்முறைகளை எளிமைப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது.  இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன் அல்லது மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். அதனால் குடும்ப ஓய்வூதியம் பெறும் நேரங்களில்  கணவன் அல்லது மனைவியின் இறப்பு இறப்பு சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது.  நடப்பு ஓய்வூதியதாரர்களுக்கு பயன்பாட்டில் உள்ள கூடுதலான விவரங்களை கூறும் படிவம் 14 க்கு பதிலாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு எளிதான படிவம் மாற்றி அமைக்கப்படும் என்றார்.

இந்நிலையில் பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்யும் நடைமுறையை தமிழக அரசு எளிமையாக மாற்றியுள்ளது. குடும்ப ஓய்வூதியமாக மாற்ற கணவன்-மனைவி இறப்பு சான்றிதழை மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது என்று அறிவித்துள்ளது.  இந்த நடைமுறை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்யும் முறையில்,  அதிக காலம் சிக்கல் உள்ளதால், அதை மாற்றி அமைத்து தமிழக அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.