×

 தமிழகம் வரும் பிரதமர் மோடி.. பயண திட்டத்தில் திடீர் மாற்றம்.. 

 

 தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் திண்டுக்கல் வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக  பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.   பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம்  மதுரை விமான நிலையத்துக்கு வருகை தரும் மோடி, மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராம பல்கலைக்கழகம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட தளத்தில் இறங்கி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க  திட்டமிட்டிருந்தார்.  இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பிரதமர் பயணம் மேற்கொள்ள இருக்கும்   திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காலையில் இருந்தே தொடர் மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக அப்பகுதியில் பனி மூட்டம் நிலை வருகிறது. ஆகையால் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதில் தொய்வு ஏற்படும்.  அது பாதுகாப்பானதாக இருக்காது என்றும் கருதப்படுகிறது.  இதே நிலை நீடித்தால் மதுரை விமான நிலையத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி மதுரையில் இருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக காரில் பயணிக்கவும்  ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன..  காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி 3.30 மணி அளவில் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.