பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி..
இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, குடும்பத்தினருடன் நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. 16 வயதான அவர் 2019-ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரான பிரக்ஞானந்தா , சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28 ஆம் தேதி தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார். அவரது சகோதரி வைஷாலியும் கலந்துகொள்கிறார்.
பிரக்ஞானந்தா ஏற்கனவே கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் நடைபெற்ற சர்வதேச அளவிலான சதுரங்க தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வயதிலே செஸ் விளையாட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் பிரக்ஞானந்தாவை, முதல்வர் உட்பட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை குடும்பத்தினருடன் அவரது இல்லத்திற்கு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின்போது , நினைவுப் பரிசு ஒன்றையும் அளித்த ரஜினி, நாட்டிற்கு பல சாதனைகள் செய்து விருதுகள் வெல்ல வேண்டும் எனவும் வாழ்த்தியிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, “மறக்கமுடியாத நாள்.. குடும்பத்தாருடன் ரஜினிகாந்த் அங்கிளை சந்தித்தேன்... பெரிய உயரங்களை எட்டிய போதிலும் அவரது அடக்கத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டேன். மகிழ்ச்சி..” என்று குறிப்பிட்டுள்ளார்.