×

மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்பு:  அரசிடம் வலியுறுத்தும் தலைவர்கள்..  

 

 
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிச. 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களையும், நுகர்வோரின் சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டால், சிறப்பு முகாம்கள் நடைபெறும்காலஅவகாசம் போதுமானதல்ல. எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்த வேண்டும். மேலும், தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைப்பதையும், மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மின்இணைப்புடன் ஆதார் எண்ணைஇணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால், பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கும்,குழப்பத்துக்கும் உள்ளாகியுள்ளனர். மக்களின் தகவல்களை ஒவ்வொன்றாக ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு மத்திய அரசுகட்டாயப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. மின் இணைப்புடன், ஆதார் எண்ணை டிசம்பர் மாதத்துக்குள் இணைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

இலவச மின்சாரம் பெறும் வாடிக்கையாளர்களைக் கணக்கெடுக்கவே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தமிழக அரசு கூறும் காரணம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழகஅரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று  குறிப்பிட்டுள்ளார்.