×

புதுக்கோட்டை தீண்டாமை - நீர்தேக்க தொட்டியை இடிக்க அனுமதி

 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில், நீர்தேக்க தொட்டியை இடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், அச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும் பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நீர்தேக்க தொட்டியை இடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, வேங்கைவயல் இறையூர் ஏடி தெருவில் குடிநீர் இணைப்பு மற்றும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 9 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார் எம்.எம். அப்துல்லா எம்பி. கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும் 2 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய்களும், 7 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, இதுவரை 70 இதுவரை விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுதியளித்துள்ளார்.