×

பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற முயற்சிக்கும் பழனிசாமி - ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு..

 

பொதுச்செயலாளர் பதவியை குறுக்குவழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக  உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று 2வது நாளாக  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணை நடைபெற்றது.   அப்போது  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார்  வாதாடினார்.  நேற்றைய தினம் இருதரப்பிலும்  காரசாரமான வாதங்கள்  முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது.  

அப்போது  அதிமுகவின் அவைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகள் என்னென்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு  பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர் என்று  பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமி செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது. திருத்தப்பட்ட  விதிகளுக்கும், அதற்கு முன்னர் இருந்த விதிகளுக்குமான ஒப்பீடு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதோடு,  ஜெ. மறைவுக்கு பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டது.  மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்திருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் தேவைப்பட்டிருக்காது என்றும்,   பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் பழனிசாமி கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் கூறப்பட்டது.  

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  என்பது 5 ஆண்டு பதவிக்காலம் கொண்டது என்றும், அதுவரை  கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்கள்  இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி என்றும் கூறினர். கட்சி அலுவலம், தேர்தல் முடிவு, நிர்வாகிகள் நியமனம் , பொதுக்குழு, செயற்குழு கூட்டுவது  என அனைத்திலும் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இபிஎஸ்  தரப்பு கூறுவதை போல் எதுவும் இல்லை எனவும்,
பொதுச்செயலாளர் பதவியை குறுக்குவழியில் பெற பழனிசாமி  முயற்சிப்பதாகவும்  ஓபிஎஸ் தரப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவது  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது, இந்த தேர்வு கட்சி அடிப்படை விதியோடு தொடர்புடையது. அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி தான் என்று தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி வசதிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர்; அவர் இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சியின்  நிலைப்பாடு என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி எடப்பாடி பழனிசாமி  ஜெயலலிதாவின் கட்சி பதவிக்கு வர நினைத்தார் என்றும்  பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.