×

அண்ணாமலை மிகச்சிறந்த அறிவாளி; பத்திரிக்கையாளர் நடந்துகொண்டதுதான் தவறு- பச்சமுத்து

 

அண்ணாமலை ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. 

பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரின் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதுவரை கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்த அண்ணாமலை.. வாட்ச் பற்றி கேட்டதும் நிதானம் இழந்து பதற்றம் அடைந்தார். வாட்ச் பற்றி கேட்ட ஆங்கில ஊடகம் ஒன்றை சேர்ந்த செய்தியாளர்களிடம் தனது வாட்சை கழற்றி நீங்களே இதில் மைக் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

இதை தொடர்ந்து, நான் பாஜக தலைவர்.. நீங்க யார்.. உங்க பேரு என்ன.. சேனல் பேரு உங்க பேரு சொல்லுங்க என்று கோபமாக கத்தினார். பொதுவாக கேள்விகளுக்கு பதில் தெரியாத போதெல்லாம் சேனல் பேர் கேட்டு.. "நீங்க திமுக சேனல்" என்று சொல்லி அண்ணாமலை கேள்வியை புறக்கணிப்பதுபோல் பேசினார்.

அப்போது இன்னொரு செய்தியாளர் ஒருவர்.. நீங்கள் திமுக மீது ஊழல் புகார்கள் வைக்கிறேன் என்று கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு ஆதாரம் கொடுக்கவில்லையே. எப்போது ஆதாரம் கொடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு கோபம் அடைந்த அண்ணாமலை, அதோடு நிற்காமல் அந்த செய்தியாளரை மிரட்டும் வகையில்.. நீ செய்தியாளரா என்று கேட்டு அண்ணாமலை மிகவும் மோசமாக பேசினார். 


அண்ணாமலையின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், புதிய தலைமுறை செய்தி நிறுவனரும், ஐஜேகே தலைவருமான பச்சமுத்து, “அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்டது தவறு, செய்தியாளர்கள் சூழ்நிலை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். அண்ணாமலை மிக திறமையானவர், மிகச் சிறந்த அறிவாளி, சின்ன வயதில் மிகப் பெரிய பதவிக்கு வந்திருப்பவர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். அனைத்திற்கும் ஆதாரம் வைத்துள்ளார். அவர் இல்லையெனில் இன்று எதிர்க்கட்சி தலைவரே இல்லை என்பதுபோல் செயல்படுகிறார். அண்ணாமலையிடம் அனைத்து சேனல்களும் போட்டிப்போட்டு கேள்வி கேட்பது சரியல்ல. அண்ணாமலை கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அந்த பிரச்சனையால் அவர் சிரமத்தில் உள்ளனர்” எனக் கூறினார்.