×

காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

 

பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வந்தடைந்தார். 

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி திண்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக சில புத்தகங்களை வழங்கினார். 

திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் காரை விட்டு வெளியே வந்து பொதுமக்களை பார்த்து கையசைத்தார். இதேபோல் பிரதமர் மோடியை கண்ட பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேறு அளித்தனர். இதனையடுத்து பட்டமளிப்பு விழா நடைபெறும் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வெள்ளை நிற தொப்பி அணித்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்