×

"இல்லையென்றால் வேலியே பயிரை மேய்ந்ததற்கு சமமாகிவிடும்..." -  தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை!!

 

விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணை கைதிகள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 18ஆம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். 

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததால் காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாலேயே விக்னேஷ் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த வழக்கில் அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் இந்த தண்டனை போதாது. கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும். இல்லையென்றால் இதுபோன்ற மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கும்.

காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல் பெயரளவில் இல்லாமல் மக்களுக்கு உரிய பாதுகாப்பாக இருக்க வேண்டும். விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் வேலியே பயிரை மேய்ந்ததற்கு சமமாகிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.