×

அதிமுக அலுவலக கலவர வழக்கு - ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் 5 மணிநேரம் விசாரணை

 

அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரண்டு பேர் நேரில் ஆஜராகி உள்ளனர்.

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வானகரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரத்தில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிமுக அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகத்தில் இருந்து கட்சி நிதி, வங்கி ஆவணங்கள், சி.பி.யு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றார். 

இச்சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி சண்முகம், ஈ.பி.எஸ் ஆதரவாளரான ஆதிராஜாராம், உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி, ஓ.பி.எஸ் ஆதரவாளரான பாபு ஆகியோர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த 4 புகார்களின் அடிப்படையில் 4 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட இந்த 4 வழக்குகளும் தமிழக அரசால் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி வெங்கடேசன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா மற்றும் செல்வின் சாந்தகுமார் ஆகிய 4 பேர் இந்த விசாரணைக்காக ஒரு குழுவாக நியமிக்கப்பட்டனர். இந்த சிபிசிஐடி அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஏழாம் தேதி மற்றும் 15ஆம் தேதி என இரண்டு தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தினுள் சென்று நேரிடையாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் மகாலிங்கம் கடந்த 14ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரடியாக ஆஜரானார். அதன் பின்பு இபிஎஸ் ஆதரவாளர் சிவி சண்முகத்தின் அலுவலகத்திற்கு சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். ஓபிஎஸின்  மற்றொரு ஆதரவாளர் பாபுவிடம் இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில்  மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

அதிமுக அலுவலகத்தில் இருந்து பொருட்கள் மட்டும் ஆவணங்கள் திருடப்பட்டதாக சிவி சண்முகம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில்
சிபிசிஐடி அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி  தெரிவித்திருக்கிறார்.  சிவி சண்முகம் கொடுத்த புகாரில்  அங்கு நடந்த சம்பவத்தில் தான் இல்லை எனவும் தெரிவித்ததாகவும் அதற்குரிய ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். சிபிசிஐடி அதிகாரிகளால் மொத்தமாக சுமார் 50 கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகவும் அதற்கு அனைத்துமே விசாரணை போது முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.