×

#Breaking  அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார் ஓபிஎஸ்

 

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து ஓ .பன்னீர்செல்வத்தை நீக்க எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வருகிறார். அதிமுக பொது குழு கூட்டம் நடத்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  இதை அடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்களை குறைத்து பொதுச்செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட்டுள்ளது.  வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட கடன் விவகாரம் ஆகியவற்றில்  ஈடுபட பொதுச்செயலாளருக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  வரவு செலவுகளை ஆராய்தல்,  நிர்வகித்தல் உள்ளிட்ட பொறுப்புக்கள் பொதுச்செயலாளர் வசம் சென்றுள்ளன.  இரட்டை இல்லை சின்னத்தை ஒதுக்க கோரி கையெழுத்திடும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர் . இதனால் ஓபிஎஸ்-ஐ நீக்கும் தீர்மானம் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கொண்டுவரப்படும் என்று கே.பி.முனுசாமி  அறிவித்துள்ளார்.  இதன் மூலம் ஓபிஎஸ அதிமுகவில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் மட்டுமின்றி மனோஜ் பாண்டியன்,  வைத்தியலிங்கத்தை அதிமுகவில் நீக்கவும்  தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.