ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இதனிடையே அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரண்டு பேரில் யார் பெரியவர்கள், யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் 87 பேர், தலைமை கழக நிர்வாகிகள் 114 பேர் பங்கேற்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் பங்கேற்பு, ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.