×

பக்தி இல்லாதவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது- ஐகோர்ட்

 

தெய்வபக்தி இல்லாதவர்களை  கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அந்த கேள்வியை இடம்பெறச் செய்யவில்லை எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்த நீதிபதிகள், அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.