×

"காலை உணவை மாணவர்கள் தவற விடக்கூடாது" - முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!!

 

காலை உணவை யாரும் தவற விடக் கூடாது என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில்,   மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்; உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன்.மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம். நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும்.

பல மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவது தெரிகிறது. நீங்கள் எல்லோரும் காலை உணவு சாப்பிட்டு விட்டீர்களா ? என்றும்  மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அத்துடன் மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் வழங்கப்படும். இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்.காலை உணவை மாணவர்கள் அவசியம் அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன்னதாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டத்திற்கு அரசாணை விரைவில் வெளிவரவுள்ளது.