×

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது- ஐகோர்ட்

 

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் கோவில் நிதியில் அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும்,  பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமர்ப்பித்தார்.

கோவில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோவில் நிதியை அறநிலையத்துறைக்காக பயன்படுத்துவதாகவும், எந்த தயக்கமும் இல்லாமல் கோவில் நிதியை அரசு நிதி போல பயன்படுத்துவதாகவும் வாதிட்டார். இதையடுத்து, கோவில் நிதி, தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது எனவும், அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் செலவழிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது எனவும், கண்காணிப்பு என்ற பெயரில் கோவில் வளங்களை எடுக்க முடியாது எனவும் கூறி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.