×

"அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி" - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

 

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் 15 வரை தமிழகத்திலுள்ள "அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி" ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளுப்படுகிறார்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் சமூக வலைதள ஊடகங்களில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார் . அத்துடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும் படி பிரதமர் மோடி வலியுறுத்தினார்.  இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது.