×

புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை 

 

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.65 காசுகள் என்பது கடந்த 50 ஆண்டுகால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இதுவே முதல் முறை.

முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.55 காசுகளில்  இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு  இன்று இரவு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு  நாளை (9-1-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் முட்டை யின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

நாமக்கல் பகுதிகளில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் அங்கு முட்டையின் நுகர்வும் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து அதிகளவு அனுப்பப்பட்டு வருகிறது. அதே சமயம் பிற மண்டலங்களிலும்  முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே  விலை  உயர்வுக்கு காரணம்  என்கின்றனர் பண்ணையாளர்கள்.

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,000 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.