×

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் நளினி

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கிய நிலையில், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வந்தவர்கள்  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பையர்ஸ் ஆகிய 7 பேரும். இவர்களில் பேரறிவாளனை , கடந்த மே மாதம் 18ஆம் தேதி  உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி  விடுதலை செய்தது.  பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள ஆறு பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.   அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி  மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும்  தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி தங்களையும் விடுதலை செய்ய  வேண்டும் என்று கோரியிருந்தனர்.  இந்த வழக்கை கடந்த 3 மாதங்களாக  நீதிபதி டி.ஆர்.கவாய் , நாகரத்னா அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  முருகன், சாந்தன்,  நளினி,  ரவிச்சந்திரன்,  ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பையர்ஸ் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது. 
 
இந்நிலையில், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ததை தொடர்ந்து தனக்கான பரோலை ரத்து செய்யும் படி வேலூர் மத்திய சிறைக்கு நளினி கடிதம் எழுதியிருந்தார். இதேபோல் விடுதலை தீர்ப்பிற்கான நகல் கிடைத்ததை அடுத்து சிறை நிர்வாகம் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி நளினியை விடுவித்தனர். இதேபோல் வேலூர் மத்திய சிறையில்  இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் திருச்சி இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.