×

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு செப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

 

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர வரும் 22-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட 'நீட்' மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவத்துறை விண்ணப்பிக்கும் தேதியை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் 2022-23 ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள 10,425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான முதற்கட்ட பணியாக விண்ணப்ப தேதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை tnhealth.tn.gov.in, tnmedicalselection.org என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு பின் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படும்