×

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் :  நாளை தாயகம் வரும் உடல்..

 

குவைத் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல்  நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது.  

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில்,  சொந்த ஊரில் சிறு கடை வைத்து  தொழில் செய்து வந்திருக்கிறார்.  அதிலும் நஷ்டம் ஏற்பட்டாதால்   வறுமையில் சிக்கித் தவித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று வாழ்வாதாரத்தை தேடி கொள்ளலாம் என்று முடிவு செய்து, தனியார் முகவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, கடந்த செப்டம்பர் 3ம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். குவைத்தில்  முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கச் சொல்லியுள்ளனர்.  

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான முத்துக்குமரன்  தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டதாக கூறியிருக்கிறார்.  பின்னர்  இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக்கொண்டு இருந்த வேளையில், கடந்த 7ம் தேதி புதன்கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களது  குடும்பத்தினருக்கு செய்தி  கிடைத்துள்ளது. முத்துக்குமரன்  வேலை  செய்த குவைத் நாட்டை  சேர்ந்தவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றதும் தெரியவந்தது.  
இதனால் அதிர்ச்சியடைந்த  அவரது குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் முத்துக்குமரன் உடலை உடனே தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய  மற்றும் மாநில அரசு உதவிட வேண்டும் என்று கொரிக்கை விடுத்தனர்.  

 இதனையடுத்து   இந்திய  வெளியுறவுத்துறை இதில் உடனடியாக தலையிட்டு, குவைத் நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்குகொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என  பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில்  உயிரிழந்த முத்துகுமரனின் உடல் நாளை  திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டு,  அவரது சொந்த ஊருக்கு  அனுப்பி வைக்கப்பட உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே முத்துக்குமரனை  சுட்டுக்கொன்ற  குவைத் காவலர் ஒருவரும்,  அவர் வெளிநாடு செல்ல ஏஜெண்டாக செயல்பட்ட ஆந்திரா, உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.