×

சிறப்பு பேருந்துகளின் வசதியை பயணிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் சிவசங்கர்

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் என்ற புகார் இதுவரை எதுவும் எழவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


பொங்கல் பண்டிகையையொட்டி  இயக்கப்பட்டுவரும் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில்  இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.நேற்றைய தினம் சென்னையில் இருந்து சராசரியாக இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது அதன் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 300 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இன்று மாலை 7 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளில்  1544  பேருந்துகளும் 1855 சிறப்பு பேருந்துகளில் 904 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 192 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஒட்டு மொத்தமாக   இரண்டு நாட்களில் 5134 பேருந்துகள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 66 ஆயிரத்து 462  பயணிகள் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கு 16 முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத மாதிரி இந்த ஆண்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், அரியலூர் செல்வதற்கு முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதே போல் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து  ஓசூர் மற்றும்  கிருஷ்ணகிரி செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. காணும் பொங்கல் முன்னிட்டு சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல  450 சிறப்பு பேருந்து இயக்கப்படும், 18 ஆம் தேதி தேதி  அதிகாலை சென்னை வருபவர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 125 சிறப்பு பேருந்து இயக்கப்படும்” எனக் கூறினார்.