×

நீட் தேர்வு- அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு பதிலடி

 

நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு, பாஜக தலைவர் நீட் வேண்டும் என கூறினால் அவர் தமிழ்நாடு மக்களுக்கு எதிராக உள்ளார் என பொருள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் உள்ள மருத்துவ பணியாளர்களோடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொங்கல் வைத்து கொண்டாடினார். தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஒருங்கிணைந்து நடத்திய பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களோடு பொங்கல் விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுவது போன்ற அநாகரிக செயலை திமுக அனுமதிக்காது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க தலைமைக் கழகத்திற்கு பரிந்துரைக்கிறேன்.கிருஷ்ணமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் விருகம்பாக்கத்தில் பேச தொடங்கிய 10 நிமிடங்களில் அவரது பேச்சின் போக்கை கண்டு தடுத்து நிறுத்தப்பட்டது

தமிழ்நாட்டின் நிலவரங்கள் முழுமையாக தெரிந்தால் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவிக்க மாட்டார். அவர் கருத்து சொல்லும் முன் தமிழ்நாட்டின் நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு, பாஜக தலைவர் நீட் வேண்டும் என கூறினால் அவர் தமிழ்நாடு மக்களுக்கு எதிராக உள்ளார்” எனக் கூறினார்.