×

மழைக்காலத்தில் வெறும் காலில் நடந்தால் எலி காய்ச்சல்- அமைச்சர் மா.சு.

 

மழைக்காலத்தில் வெறும் காலில் நடந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு வருகிறது என்றும் சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல், கண் சிவந்தல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டவுடனேயே சிகிச்சை எடுத்து கொண்டால், பாதிப்பு இருக்காது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனரகத்தில், எலிக்காய்ச்சலை கண்டறியக்கூடிய லெப்டோ ஸ்பைரோஸிஸ் சேவையை ஆய்வகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவில் 10 இடங்களில் உள்ள லெப்டோ ஸ்பைரோஸிஸ் ஆய்வகம் தற்போது அரசு சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை எலி காய்ச்சலை கண்டறிய எலிசா என்ற பரிசோதனை உதவிய நிலையில் இனி, லெப்டோ ஸ்பைரோஸிஸ்  ஆய்வகம் உதவியாக இருக்கும். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் எலி காய்ச்சலால் சிறுநீரகம், நுரையீரல் உள்ளிடவை பாதிக்கும். 

எலி காய்ச்சலால் தமிழகத்தில் 2018-ம் ஆண்டு 2 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் பேரில் 10 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் வெறும் காலில் காலணி இல்லாமல் நடந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு வருகிறது. சிறிய அளவிலான காய்ச்சல், கண் எரிச்சல், கண் சிவந்தல் ஆகியன எலி காய்ச்சலுக்கான அறிகுறி. அறிகுறி தென்பட்டவுடனேயே சிகிச்சை எடுத்து கொண்டால், பாதிப்பு இருக்காது.  காலாவதியான மருந்து கையிருப்பு வைந்திருந்தால் அது குற்றமாகும் என்றும் காலாவதியான மருந்துகள் வைத்திருப்பது குறித்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


சென்னையில் கால்பந்து விளையாட்டு வீராங்கனை கால் அகற்றம் குறித்தான கேள்விக்கு, முறையான சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் கூறும் நிலையில், இதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டியின் அறிக்கைபடி நடவடிக்கை  எடுக்கப்படும். டெங்குவுக்கு, தமிழகத்தில் 377 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 11 மாதங்களில் 4 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். எனினும் தொடர் கண்காணிப்பால், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது” எனக் கூறினார்.