×

3 நாட்களில் குணமடையக்கூடிய காய்ச்சலுக்கு பள்ளிக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும்- மா.சு.

 

மூன்று நாட்களில் குணப்படுத்தக் கூடிய காய்ச்சலுக்காக,  தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு பதட்ட நிலையை உருவாக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் காய்ச்சலால் நேரிட்டால், அரசு தான் முதலில் துணை நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளனர்.  3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால், மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படும்.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை எதுவும் இல்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு, பதட்ட நிலையை உருவாக்க வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்தார்.