×

ஆல் பாஸ் முறை கிடையாது; கட்டாயம் தேர்வு நடைபெறும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

 

முன்கூட்டியே தொடக்க பள்ளிக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “குழந்தைகளின் திறமையை கண்டறியும் பணி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. பெற்றோர்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். மே 5 ஆம் தேதி பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் அணிய வேண்டும் எனதான் அறிவுறுத்தபட்டுள்ளது. தற்போதைய புதிய வழிகாட்டுதலில் தனிமனித விருப்பத்தின்படி பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியலாம் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக அரசு அமைந்த பிறகு முதல்முறையாக தேர்வு நடத்துகிறோம். கத்திரிவெயில் உள்ளநிலையில் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆல் பாஸ் போடமுடியாது. கட்டாயம் தேர்வு நடைபெறும் என்பதுதான் என் நிலைபாடு. மாணவர்கள் நலன் கருதிதான் இந்த  முடிவு எடுக்கப்பட்டது. ஒற்றை ஆசிரியர் உள்ள பள்ளியை தமிழகத்தில்  மூட அரசு விரும்பவில்லை. எனவே ஒரு மாணவர் படித்தாலும் பள்ளி இயங்கும்” எனக் கூறினார்.