×

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு உறுதி

 

பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக பழனி முருகன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், 
பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆகம விதிகளுக்கு உட்பட்டு குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓத  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பழனி முருகன் கோயிலில் இருந்து இடும்பன் கோயில் வரை ரோப்கார் திட்டம் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.